இந்தியாவில் தற்போது உள்ள வேலையின்மை நெருக்கடியை தீர்ப்பதற்கு விவசாயம் அல்லாத மற்ற துறைகளில்
2030 ஆம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 78.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான முழுமை யான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் வேலை வாய்ப்பை உரு வாக்க “பிரதம மந்திரியின் தொகுப்பின்” கீழ் 5 ஆண்டு களுக்கு 5 திட்டங்கள் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படும் என்று அறிவித்தார்.
நிதியமைச்சர் அறிவிப்பு என்ன?
1. அதிகபட்ச மாத ஊதியம் ரூ.15000 என நிர்ணயிக்கப்படும். முதல் முறையாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000 என 3 மாதத்திற்கு ரூ.15000 வழங்கப்படும். இதன்மூலம் முதல் முறையாக வேலையில் சேரும்
2 கோடியே 10 லட்சம் இளைஞர்கள் பயனடை வார்களாம்.2. 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி (internship) அளிக்கப்படுமாம். நாட்டின் 500 பெரிய நிறுவனங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர்என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தம் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பார்களாம். அதற்கு மாதம் ரூ.5000 என்ற அடிப்படையில் 12 மாதங்கள் ‘அலவன்ஸ்’ வழங்கப்படும். மற்றும் ஒரு முறை உதவியாக ரூ.6000 வழங்கப்படும்.
3. 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் (skill) மேம்பாட்டு பயிற்சி அளிப்பதாக அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 4 லட்சம் இளைஞர்கள் என்ற முறையில்
5 ஆண்டுகளுக்கு 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி. 1000 தொழிற் பயிற்சி நிலையங்களின் தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் கூட.
4. நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்ற விநோத அறிவிப்பும் வெளியிடப் பட்டுள்ளது. அதாவது, புதிதாக வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் ரூ.3000 என்ற அடிப்படையில் 2 ஆண்டுக்கு மொத்தம் ரூ.72000, வேலைக்குஎடுக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
5. உற்பத்தி துறையில் முதல் முறையாக இளைஞர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை (incentive) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்களாம்.
இப்படி கிளம்பிவிட்டார்களே...
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம் என்று கிளம்பியவர்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு தற்போது வேலைக்கு பயிற்சி அளிப்போம் என்று கூறுகிறார்கள். கிடைக்காத வேலைக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்து என்ன பயன்? 2016 முதல் 2022 வரை திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களில் வெறும் 18 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்று அரசாங்க புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. வேலையே இல்லாத போது வேலையில் சேர்ந்தால் ரூ.15000 தருவேன் என்று சொல்வது படித்து முடித்து வேலை யில்லாமல் தவிக்கும் இளைஞர்களை கிண்டல் செய்வதாகும். ஆனால் வேலையில் இத்தனை பேரை சேர்த்துள்ளோம் எனக்கூறி, நிறுவனங்கள் ரூ.72000 பெறுவார்கள்.
2 லட்சம் கோடியை செலவு செய்ய தயார் என்றால்...
4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 5 ஆண்டுக்கு சேர்த்து 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய அரசு தயார் என்றால், அதை உண்மையாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம்.
1. கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கலாம்.
2. நகர்ப்புற மக்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கியிருக்கலாம்.
3. லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கலாம்.
அதைவிடுத்து ஏற்கனவே அரசாங்க சலுகை களால் கொழுத்துப்போய் இருக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மேலும் ‘ஊக்கத் தொகை’ என்ற பெயரில் மக்கள் பணத்தை வாரிக் கொடுப்பது பெரும் மோசடியாகும்.
30 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது எப்போது?
மோடி மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருகிறது. இதற்கு காரணம் இந்திய ரயில்வேயில் பல்வேறு மட்டங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதே. இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் 1.5 லட்சத்திற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்படி ஒன்றிய அரசு துறைகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சேர்த்து 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்பு வது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில்இல்லை.
ஆண்டுக்கு 78.5 லட்சம் புதிய வேலைகள் மிக அவசியம்
இந்தியாவில் வேலை செய்ய தகுதியான மக்களின் எண்ணிக்கை 56.5 கோடி ஆகும். விவசாயத் துறையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை 2017-2018 ஆம் ஆண்டு 44 சதவீதமாக இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டு 46 சதவீதமாக அதி கரித்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் தற்போது உள்ள வேலையின்மை நெருக்கடியை தீர்ப்பதற்கு விவசாயம் அல்லாத மற்ற துறைகளில் 2030 ஆம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 78.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 2013-2014 முதல் 2021-2022 வரை உற்பத்தித் துறையில் வெறும் 32 லட்சம் வேலைகள் மட்டுமே அதிகரித்துள்ளது. உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் உற்பத்தி பெருக வேண்டும். உற்பத்தி பெருக வேண்டும் என்றால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றால் மக்கள் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும். ஆகவே அரசு மக்கள் வாங்கும் சக்தியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கு மாறாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குறிப்பிட்டுள்ள 5 திட்டங்கள் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாகப் போவதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.
செல்வராஜ்
மாநில துணைச் செயலாளர், இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கம்